சனி, 15 பிப்ரவரி, 2014

“வே.ஆனைமுத்து பெரியாரின் அசைக்க முடியாத வித்து”

ஜூனியர் விகடன் பாராட்டு

------------------------------------

தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாயாய் மகிழ்கிறோம்..

திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் (15 தொகுதிகள்)

90 வயதைத் தொட்டு, பெரியாரின் பெருந்தொண்டராக இன்றும் உற்சாகமாக வலம் வருகிறார் திருச்சி வே.ஆனைமுத்து.

அரசுப் பணியைத் துறந்து அரசியல் பணியை ஏற்றவர். பகுத்தறிவு, நாத்திகம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பொதுவுடமை, தேசிய இன விடுதலை ஆகிய தத்துவத்துக்காக எழுதியும் பேசியும் போராடியும் வருகிறார். இளமையில் முடுக்குடன் இருப்பவர்கள் முதுமையை அடையும்போது மெள்ள தவங்கி, கொள்கையில் சாயம் வெளுத்து, முடங்கிவிடக் கூடும்.

ஆனால், ஆனைமுத்து வயது கூடக் கூட கொள்கை உரம் பெற்றது. அப்படிப்பட்ட ஆனைமுத்து எழுதிய கட்டுரைகள் மொத்தமாக 15 தொகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

அறநெறி அடிக்கற்கள், தமிழ்நாட்டில் பண்டபாட்டுப் புரட்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டம், விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு, நாத்திகன் போர்வாள், மார்க்சியப் பெரியாரியம், இயக்கம், அரசியல். ஒடுக்கப்பட்டோர் விடுதலை, தமிழீழ விடுதலை, காலப்பதிவுகள், பெரியாரியல் ... என்ற பகுப்புகளாய் பிரிக்கப்பட்டு காலவரிசைப்படி இந்தக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.

ஆனைமுத்துவின் அரசியல் அடிநாதமாக அமைந்தவை இரண்டு கருத்துக்கள். ஒன்று, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, அதற்காகவே தொடக்கம் முதல் இன்று வரை இடைவிடாமல் பேசி வந்துள்ளார்.

சமுதாயத்திலும் அரசியல் அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் சமநிலை பெறாதவர்கள்தான் இந்தியச் சமூகத்தில் 95 சதவீதத்துக்கும் மேல் வாழ்கிறார்கள். அவர்களின் குரலாக ஆனைமுத்துவின் எழுத்துக்கள் அமைந்துள்ளன. எந்த சாதியை அடிப்படையாக வைத்து கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப் பட்டார்களோ அதையே அந்த வாய்ப்பை அடையும் வழியாக மாற்றியது இட ஒதுக்கீடு தத்துவம்.

அதற்காக அந்த இட ஒதுக்கீடு மட்டுமே சமூகத்தை முழுமையாக முன்னேற்றி விட முடியாது என்ற யதார்த்தத்தையும் ஆனைமுத்து சொன்னார். இந்த இட ஒதுக்கீட்டை வைத்து சாதிப்பிளவை அதிகப்படுத்தும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் ஆனைமுத்து கண்டித்தார். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பது ஆனைமுத்துவின் உன்னத லட்சியமாக இருக்கிறது.

இன்னொன்று... மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் பகை சக்தியாக இல்லாமல் நட்பு சக்தியாக பார்க்க வேண்டும் என்ற பார்வையைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஆனைமுத்து.

பெரியாரை நிலப்பிரபுத்துவவாதியாக மார்க்சிஸ்டுகளும், மார்க்சியர்களை வறட்டு இயக்கத்தவர்களாக பெரியாரிஸ்டுகளும் ஒதுக்கியபோது ஒன்றிணைப்பை வலியுறுத்திச் செயல்பட்டவர் இவர். இவரால் தான் இன்று இரண்டு தரப்பினரும் இணக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இப்படி தத்துவ ரீதியாகவும் போராட்டங்களின் மூலமாகவும் தனது பங்களிப்பைச் செய்த ஆனைமுத்துவின் எழுத்துக்களை மொத்தமாகப் படிக்கும்போது பெரியாரின் அசைக்க முடியாத வித்து இவர் என்பதை உணர முடிகிறது.
புத்தகன்.

பெரியார் நூல் வெளியீட்டகம்

8/2, இராசரத்தினம் தெரு, இரண்டாம் மாடி,
மேற்குத் தாம்பரம், சென்னை ‡ 45.

(15 தொகுதிகளும் சேர்த்து) விலை : 4,500

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக