புதன், 24 டிசம்பர், 2014

வக்கீல்கள் துணையோடு நடக்கும் மோசடித் திருமணங்கள் செல்லாதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு



வக்கீல்கள் துணையோடு
நடக்கும் மோசடித் திருமணங்கள்
செல்லாதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வக்கீல்கள் அறைகளிலும்; வக்கீல்  சங்க அறைகளிலும் திருமணங்கள் நடந்ததாக போலிச் சான்றிதழ்களை வக்கீல்கள் வழங்குவதும் -

அதை வைத்து பதிவாளர் அலுவலகங்களில் திருமணங்களைப் பதிவு செய்வதும் செல்லாது எனவும்;

சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகாமல் திருமணங்களைப் பதிவுசெய்யக் கூடாது எனவும் -

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

*       

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாண்டியன் என்பவரும் -

சென்னையைச் சேர்ந்த ராமபிரசாத் என்பவரும் -

தங்கள் மனைவிகளை அவர்களது பெற்றோர்கள்  சட்ட விரோதமாகக் காவலில் வைத்திருப்பதாகத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தனித்தனியாகத் தாக்கல் செய்திருந்தனர். இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி  ராஜேஸ்வரன் நிதிபதி பிரகாஷ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பெண்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

பாலகிருஷ்ணன் தன் மனைவியாகக் குறிப்பிட்ட பெண்; பாலகிருஷ்ணனை தனக்குத் தெரியும்; ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் -

எங்களுக்குத் திருமணம் நடந்ததாக சான்றிதழ் அளித்துள்ள வக்கீலையும் தெரியாது; அவரது அலுவலகமும் தெரியாது என்றும் கூறி மறுத்தார்.

இதேபோல் ராம் பிரசாத் தன் மனைவி எனக் கூறிய பெண்ணும் வக்கீல் கொடுத்திருக்கும் - திருமணச் சான்றிதழ் மோசடியானது அந்த வக்கீலைப் பார்த்ததுமில்லை அவர் அலுவலகத்திற்குச் சென்றதுமில்லை எனவும் மறுத்துள்ளார்.

திருமணச்  சான்றிதழ்கள் இரண்டும் ஒரே வக்கீல் கொடுத்திருப்பதும்; பாரிமுனை அங்கப்ப நாயகன் தெருவில் உள்ள ஒரே முகவரியிலிருந்து வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

மேலும் -

பாலகிருஷ்ணன் அளித்த வழக்கறிஞர் சான்றிதழில் திருமணம் அங்கப்ப  நாயகன் தெருவில்  நடந்ததாகவும்; ஆட்கொணர்வு மனுவில் திருமணம் வடபழநி கோவிலில் நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதும் நீதிபதிகளுக்குச்  சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே - இந்த மனுக்கள் குறித்தும்; இதுபோன்று வக்கீல்கள்  நடத்தி வைத்ததாக கூறும் இதர திருமணங்கள்   குறித்தும் விசாரித்து அறிக்கை தரும்படி சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.யான ஜெயகெளரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி.ஜெயகெளரி விசாரித்து அளித்துள்ள அறிக்கை வக்கீல்களின் மோசடிகளையும்; திருமணப் பதிவாளர்களின் மோசடிகளையும் அம்பலப்படுத்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சென்னை ராயபுரம் சார் பதிவாளர் அலுவலகம்; சென்னை வடக்கு இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இரு பதிவாளர் அலுவலகங்களில் 2013 ஆண்டு மட்டும் 3500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் வக்கீல்கள் சான்றிதழ்களை வைத்துப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மணமக்களை நேரில் அழைத்து வராமல் தங்கள் சான்றிதழை வைத்து திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டுமென வழக்கறிஞர்கள் கும்பலாகப் போய் ஒரு சார்பதிவாளரை மிரட்டும் காட்சி சி.சி.டிவி கேமராவில் பதிவு செய்திருப்பதையும் தனது அறிக்கையில் ஜெயகெளரி குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வழக்கறிஞர் நரசிம்மன்
 - 676 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் நீல நாராயணன்
- 382 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் அதிதம்
- 318 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் எஸ்.வெங்கடேசன்
- 277 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் அலமேலு
- 269 திருமணங்களையும்
நடத்தி வைத்திருக்கிறார்கள்.

பிரபலமான கோவில்களில் புரோகிதர்கள் நடத்தி வைத்த திருமணங்களை விட இது அதிகம் என்கிறார் ஒரு பிரபல வழக்கறிஞர்.

இது பற்றி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டபோது சுயமரியாதைத் திருமணச்  சட்டத்தில், மரியாதைக்குரிய ஒரு நபரின் முன் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளதைப் பயன்படுத்தியே -

வழக்கறிஞர்கள் இத்தகைய திருமணங்களை செய்து வைத்திருக்கிறார்கள். எனினும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்பதாகவும் -

இது போன்ற திருமணங்களுக்கு வழக்கறிஞர் சங்கத்தின் பெயரையோ; அலுவலகத்தையோ பயன்படுத்தினால் விசாரித்து அந்த வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் -

பொதுவாகவே பதிவுத் திருமணங்களானாலும்; காதல் திருமணங்களானாலும் பெற்றோர்களின் ஒப்புதலோடு நடக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இவைகளை எல்லாம் பார்த்த பிறகே -

வக்கீல் சான்றிதழ் அடிப்படையில் பதிவு செய்த திருமணங்கள் செல்லாதென நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இது போன்ற திருமணங்கள் சென்னையில் மட்டுமல்ல - மாவட்டத் தலைநகரங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஏராளமாக நடந்து வருகின்றன. உதாரணமாக கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இத்தகைய திருமணங்கள் தினந்தோறும நூற்றுக்கணக்கில் நடைபெறுகின்றன.

இவைகள் எல்லாம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி இவைகளுக்கு தீர்வாகும் தீர்ப்பினை உயர்நீதிமன்றம் வழங்க வேண்டும். இந்தத் திருமணங்கள் செல்லாதென அறிவித்தது வரவேற்கத் தக்கது; ஓரளவு மோசடித் திருமணங்களைக் குறைக்கும் என்றாலும் -

இது போதாது என்பதும்; இத்தகைய போலிச் சான்றிதழ் கொடுத்து திருமணங்களை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதும் அவசியமான ஒன்றாகும்.

வழக்கறிஞர்கள் முன் நடக்கும் திருமணங்கள் சட்டத்தின் ஒப்புதலோடு நடக்கும் திருமணம் என்ற பாமர நம்பிக்கையும் இத்தகைய திருமணங்கள் இவ்வளவு பேரளவில் நடந்திருப்பதற்கான காரணமாகும்.

போலித் திருமணங்களை நடத்தும் வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட்டால் தான் மக்களிடம் உள்ள மேற்கண்டி பாமரத்தனமான நம்பிக்கை ஒழியும்.

வழக்கறிஞர்களின் மோசடிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் தீர்ப்பும் அவசியமாகும்.

சமீபகாலமாக கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவது வக்கீல்களின் பிறப்புரிமை என்றாகி வருகிறது.

‘மெட்ராஸ்’ யாருடையது? - வேடியப்பன்



மெட்ராஸ்யாருடையது?
- வேடியப்பன்

அண்மையில் வெளிவந்த மெட்ராஸ்திரைப்படம் இணையம் மற்றும் ஊடகங்களில் விவாதங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தது. விளிம்பு நிலை மனிதர்களின் முன்னேற்றத்திற்கு அரசியல் பாதை சரியான தேர்வல்ல. கல்வியே சரியான பாதை என்பதை மையக்கருத்தாக வலியுறுத்தும் கமர்ஷியல் படம். இதுவொரு தலித்சினிமா என்று தலித்துகள் கொண்டாடுகிறார்கள். கவின்மலர் தன் முகநூலில் முதன் முறையாக தலித் கவிஞர்கள் மட்டுமே பாடல்களை எழுதியுள்ள படம்என்று உச்சி முகர்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித், இணை இயக்குநரும் எழுத்தாளருமான ஜே.பி.சாணக்யா, பாடலாசிரியர்கள் கபிலன், கானாபாலா, மற்றும் திரையுலகிற்கு புதுவரவாகும் கவிஞர் கு.உமாதேவி போன்ற பலரும் தலித்துகளாகவே ஒருங்கிணைந்து பங்களிப்பு செய்துள்ள படம் மெட்ராஸ்.

இன்னொரு புறம் தலித் எழுத்தாளரான தேவிபாரதி மெட்ராஸ் படத்திற்கு தமிழ் இந்துவில் எழுதிய விமர்சனம் சர்ச்சைக்கு உள்ளானது. காரணம், மெட்ராஸ் படம் தலித்துகள் பற்றியது மட்டுமல்ல. வட சென்னையின் விளிம்பு நிலை மனிதர்கள் அனைவருக்குமான படம் என்கிறார். மேலும், சில குறைகளையும் சொல்கிறார். தலித்துகள் அல்லாதவர்கள் பலர் மெட்ராஸ் படத்தை போகிற போக்கில் தூக்கி எறிந்துவிட்டு பேசுகிறார்கள். இதன்மூலம் தங்கள் காழ்ப்புணர்வையே பதிவு செய்கிறார்கள்.

உண்மையில் மெட்ராஸ் படம் தலித் படமா? இல்லையா? இந்தக் கேள்விக்கே இடமில்லாமல், ஆமாம் இதுவொரு தலித் சினிமாதான் என்று துணிந்து சொல்லக்கூடிய வகையில் ஒரு பார்வை யாளராகவே நிறைய சான்றுகளை எடுத்துக்காட்டமுடியும். அவை ஒருபுறமிருக்க, இயக்குநர் ரஞ்சித் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுவொரு தலித் சினிமாதான் என்று வெளிப்படையாகவே சொல்கிறார். கதாநாயகனின் வீட்டில் புத்தக அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் புத்தகங்கள், நாயகன் வாசித்துக் கொண்டிருக்கும் தீண்டாதவசந்தம்புத்தகம் போன்றவற்றை குறிப்பிட்டு பேசுகிறார்.

கதாநாயகி வீட்டிலும் அயோத்திதாசப் பண்டிதரின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. நாயகியின் தந்தை குடியரசுக் கட்சிக்காரராகவே வலம் வருகிறார். அவருடைய கட்சிக்கொடி நீல நிறத்திலானது. நாயகனின் உயிர் நண்பனான அன்பு முன்னேற்றம் அடைய அதிகாரத்தை அடைந்தே தீருவோம் என்று தலித்துகளின் அரசியல் தாரக மந்திரத்தையே சூளுரைக்கிறார். நண்பர்கள் கூட்டத்தினரும் அடங்கினதெல்லாம் அந்தக் காலம்என்று விழிப்புணர்வும், உந்துதலும் ஏற்படுத்தும் வசனம் பேசுகின்றனர். சுவற்றில் ப்ளூ பாய்ஸ் என்று எழுதப்பட்ட விளம்பரம், திருமாவளவனின் புகைப்பட சுவரொட்டி, கால்பந்தில் நீல நிற சீருடை என்று படம் முழுக்க நீல நிறம். நம்மாளுகஎன்று பேசும் வசனம், நாயகனும், நாயகியும் தனக்குப் பிடித்த ஹீரோவாக விக்ரமை (தலித்) குறிப்பிடுவது என்று ஏராளமான சான்றுகளை ஒரு பார்வையாளராகவே கண்டறியக்கூடிய வகையில் ஐயமேயில்லாமல் இதுவொரு தலித் சினிமாவேதான்.

தலித்துகள் என்றாலே சேரிகளில் உழலும் அவலமான, சோகமான வாழ்க்கையையே இதுவரை காட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் காலத்தை மாற்றி, தலித்துகளின் கொண்டாட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர். மேலும், இனிவரும் காலங்களிலும் இந்த மனிதர்களின் கொண்டாட்டமான வாழ்க்கையையே தொடர்ந்து பதிவு செய்யும்படியான படங்களை எடுப்பேன் என்று உறுதிபடக் கூறுகிறார். இயக்குநர் ரஞ்சித்துக்கும், மெட்ராஸ் படத்திற்கும் சில குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு, நாம் நமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீல நிற ஆடை அணிந்த கதாநாயகனின் கால்பந்தாட்ட அணியிடம் தோற்கும் அணிக்கு மஞ்சள் நிற ஆடையை சீருடையாக தேர்ந்தெடுத்ததில் உள் நோக்கம் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.

ஒரு குழந்தையோட நிறுத்திடாதே. ரெண்டு, மூனு பெத்துப்போடு. நம்மக்கிட்ட காசு பணமில்லன்னாலும் நம்மக் கண்டா ஒரு பயம் இருக்குதுன்னா அதுக்கென்ன காரணம்.. படைபலம். படைபலம்என்று கட்சிப் பிரதிநிதி அறிவுறுத்துகிறார். தேசம் வலியுறுத்தும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான வெறியான பிரச்சாரத்தை தணிக்கைத் துறை எப்படி அனுமதித்தது?

தமிழ் சினிமா என்றாலே இன்றைக்கு தேவர் சினிமா என்ற நிலைதான். இதற்கு முன்பு தேவர்களும், வெள்ளாள கவுண்டர்களுமே கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தனர். அதற்கும் முன்பு முதலியார், பிள்ளை, பார்ப்பனர் சாதிகளே தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தப்பட்டு சாதி ஆதிக்கம் செலுத்தி வந்தன. கொங்கு மண்டலமும், தென் தமிழகமும் மட்டும்தான் தமிழகமா? ‘நாங்களும் இருக்கிறோம்என்று தமிழகத்தின் எஞ்சியுள்ள பகுதியினரோ, குறிப்பாக வட தமிழகமோ வெளிப்படையான சாதி அடையாளத்தோடு படமெடுக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் வட தமிழகத்தில் திரைத்துறையினர் ஏராளமாகவே உள்ளனர். அந்த வகையில் அட்டக்கத்திஎன்ற தன் முதல் படத்தின் மூலம் சென்னைப் புறநகர் மக்களின் வாழ்க்கையையும், மெட்ராஸ் படத்தின் மூலம் அசல் வட்டார மொழியுடன் சென்னை மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்தமைக்கு பாராட்டுகிறோம்.

சரி. வன்னியர் சினிமா என்று ஏதும் உள்ளதா? பாரதியின் இயக்கத்தில் வந்த மறுமலர்ச்சியும், தங்கர்பச்சானின் ஒருசில படங்களையும், இன்னும் சில படங்களையும் என அரிதாகவே தேடித்தேடி சொல்லிக் கொள்ளலாம்.

சென்னையில் பணிபுரியும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கிருக்கும் சாதிகள், வட்டாரமொழி போன்றவை அழகிபடத்திற்குப் பிறகுதான் தெற்கே தெரியவந்தது என்கிறார். நாஞ்சில் நாடனின் கதையை தன் சொந்த மண்ணிற்கான, சாதிக்கான சினிமாவாக சொல்ல மறந்த கதை’-யில் மாற்றி யெடுத்த தங்கர்பச்சான், ஒன்பது ரூபாய் நோட்டு எடுத்த அதே தங்கர்பச்சான் இன்று முகநூலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். என்னவென்று? பெயரோடு சாதி அடையாளத்தைக் கொண்டவர்கள் யாரும் என்னுடன் நண்பராக இணையக்கூடாது என்று. ஒன்பது ரூபாய் நோட்டுக்குப் பிறகு வெளிவந்த படங்களிலும் வன்னியர் அடையாளம் எதுவும் முன்புபோல் தென்படவில்லை. எதனால் இந்த மாற்றம்? ஒருவேளை சொந்த சாதி மக்களால் சோர்வும், விரக்தியும் அடைந்து இப்படிச் சொல்கிறாரா? அப்படியும் ஒரு வாய்ப்பிருப்பதை மறுக்கமுடியாது.

ஏனெனில், மறுமலர்ச்சி பாரதி சிறுநீரகங்கள் செயலிழந்து மாற்று சிறுநீரகங்கள் பொருத்தப்பட வேண்டிய நிலையில் பணத்திற்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஊடகங்களில் விளம்பரப் படுத்தப்பட்டபோது அவருக்கு பெரிய அளவில் உதவி கிடைத்துவிடவில்லை. வன்னியர் என்பதாலேயே வேட்பாளராகி, M.L.A.., M.P., அமைச்சர் என அதிகாரத்திற்கு வந்து, செல்வந்தர்களாகிய கோடீசுவரர்கள் எத்தனை பேர் பாரதிக்கு உதவ முன்வந்தனர்? ஆனால், பாரதியின் முயற்சியால் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற ராசு படையாட்சி பாடலை மட்டும் ஆளாளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், மெட்ராஸ் படத்தை தலித்துகள் போற்றிக் கொண்டாடுகிறார்கள். எதிர்ப்புகளுக்கு கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். பாராட்டு விழா எடுத்து விருதுகளை வழங்குகிறார்கள். நாம் அவர்களைப் பார்த்து முன்னேற வேண்டிய, கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம் என்கிற உண்மையை முதலில் உணரவேண்டும். அவர்கள் சினிமாவை அவர்கள் எடுத்து விட்டார்கள். நம்முடைய சினிமாவை நாம் எப்போது எடுக்கப் போகிறோம். மதுரைய பத்திப்பேச விஷால், சசிகுமார்னு நிறைய பேரு இருக்காங்க. சென்னையப் பத்தி நாந்தானே பேசியாகனும்என்று முதல் குரல் கொடுத்த சென்னை நாயகன் சந்தானத்திற்கு இருக்கும் உணர்வு திரைத்துறையிலிருக்கும் நமது படைப்பாளிகளுக்கும் வரவேண்டும்.

தமிழ் சினிமாவில் இருக்கும் வன்னியர் படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளை அளித்து கை தூக்கிவிட வன்னியர் தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் கிடக்கும் சாதிக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் நமக்கிருக்கும் மிகப்பெரும் வெற்றிடத்தை உடனடியாக நிரப்பியாக வேண்டும்.

வெளிப்படையாகவே தலித் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் தான் என்று சொல்லும் மெட்ராஸ் பட இயக்குநர் ‘‘எங்க ஊரு மெட்ராசு.. இதுக்கு நாங்கதானே அட்ரசு’’ என்று ஏகபோக உரிமையைக் கொண்டாடும் பாடல் வரிகளை பயன்படுத்துவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கப்போகிறோமா? சென்னப்ப நாயக்கரின் பெயரால் விளங்கும் சென்னைப் பட்டணம் உண்மையில் நம்முடையது என்பதை எப்போது நிலைநாட்டப் போகிறோம்?

அப்பாடக்கர்என்கிற சென்னை வட்டார கிண்டல் வழக்கு, பல்லாண்டுகளாகவே புழக்கத்தில் இருந்தாலும், சந்தானத்தின் மூலம் இன்று தமிழறிந்த எல்லா இடங்களிலும் பிரபலமாகியிருக்கிறது. அச்சு ஊடகங்களாலும், சிறுகதை, நாவல்களாலும் சாதிக்க முடியாத வெளிச்சத்தை சினிமா எனும் அதிசக்தி வாய்ந்த காட்சி ஊடகம் சாதித்துவிடும். சினிமாவில் வடதமிழகமும், அதன் அசலான வாழ்க்கையும் மனிதர்களும் சாதிகளும் கலாச்சாரமும் பதிவாக்கப்படவேண்டியது இன்றைய அவசியம்.